தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள்-நகைக்கடையில் வருமானவரி அதிகாரிகள் சோதனை


தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள்-நகைக்கடையில் வருமானவரி அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 22 Nov 2017 11:15 PM GMT (Updated: 22 Nov 2017 6:55 PM GMT)

குமரி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நகைக்கடை என 3 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கருங்கல் வெள்ளியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்துக்கு நட்டாலத்திலும், பள்ளியாடியிலும் அலுவலகங்கள் உள்ளன. மேலும் அவர் பள்ளியாடியில் நகைக்கடை, குலசேகரத்தில் பெட்ரோல் பங்க் ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் அந்த நிதி நிறுவனம் மற்றும் நகைக்கடை உள்ளிட்டவைகளில் இருந்து வரும் வருமானத்துக்கு முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து வருமானவரித்துறை இணை ஆணையர் ஜெயராமன், வருமானவரித்துறை அதிகாரிகள் வேணுகுமார், ஸ்டாலின் பீட்டர், செல்வராஜ், மாபிரி உள்ளிட்ட 20 பேர் நேற்று ஒரே நேரத்தில் குலசேகரத்தில் உள்ள பெங்ரோல் பங்க் மற்றும் நிதி நிறுவன அலுவலகங்கள், பள்ளியாடியில் உள்ள நகைக்கடை ஆகியவற்றில் ஒரே நேரத்தில் திடீரென புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பெட்ரோல் பங்க், நகைக்கடை மற்றும் நிதி நிறுவனங்கள் உடனடியாக மூடப்பட்டன.

வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென நடத்திய இந்த சோதனை குலசேகரம், நட்டாலம், பள்ளியாடி ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பகல் 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்து நீடித்தது.

இந்த சோதனை குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனையை மேற்கொண்டு இருக்கிறோம். சோதனை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால் சில முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள் ஆகியவற்றை கைப்பற்றி இருக்கிறோம். முறையாக வரி செலுத்தப்பட்டு வருகிறதா? என்பது தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தெரிவிக்க முடியும்“ என்று தெரிவித்தனர்.

எவ்வளவு நகைகள், எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் சோதனையின் போது சிக்கி இருக்கிறது என்பது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் அதுகுறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டனர். 

Next Story