கன்னியாகுமரி துண்டிக்கப்பட்ட தீவாக மாறிவிட்டது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி


கன்னியாகுமரி துண்டிக்கப்பட்ட தீவாக மாறிவிட்டது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி
x
தினத்தந்தி 5 Dec 2017 5:15 AM IST (Updated: 5 Dec 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி துண்டிக்கப்பட்ட தீவாக மாறிவிட்டது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.

தூத்துக்குடி,

கன்னியாகுமரி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை. மக்கள் 2 ஆயிரம் மீனவர்களை காணவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அரசு 500 பேர் என்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் கூறுவதைத்தான் நம்ப முடியும். மத்திய மந்திரி புயலுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றதாக கூறுகிறார். இது பொறுப்புள்ளவர்களின் பொறுப்பற்ற பதிலாக உள்ளது. இத்தனை பெரிய கடற்படையை வைத்துக் கொண்டு நம் மீனவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலையில் இருக்கிறோம்.

நம் நாட்டில் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். ஆனால் ஒரு பேரிடர் ஏற்பட்டால், அதில் இருந்து மக்களை பாதுகாக்க எந்த வசதியும் இல்லை. சென்னை எண்ணூரில் எண்ணெய் கொட்டினால் அதனை அகற்ற முடியவில்லை. வெளிநாடுகளில் எண்ணெய் கொட்டினால் எளிதாக அகற்றி விடுகிறார்கள். ஆனால் நாம் இன்னும் வாளியில் அள்ளிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும் வளர்ச்சி பற்றி பேசுகிறோம்.

2 ஆயிரம் மீனவர்களை காணவில்லை என்பது மிகப்பெரிய வி‌ஷயம். நாட்டு மக்களை பாதுகாக்க நாம் என்ன திட்டம் வைத்து இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி மட்டும் வளர்ச்சி அல்ல. வலிமை மிக்க கடற்படை இந்தியாவிடம் உள்ளது. கடலுக்குள் உளவு பார்க்கும் ஆற்றல் இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம் உள்ளது. மீனவர்கள் எங்கு சென்றார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாதா?. எங்களை காட்டி கொடுக்கத்தான் ரேடார் உள்ளது. எங்களை காப்பாற்ற இல்லை.

கன்னியாகுமரியில் இதுவரை மின்சாரம் வரவில்லை என்று கூறுகிறார்கள். கன்னியாகுமரி துண்டிக்கப்பட்ட தீவாக மாறி விட்டது. பணமில்லா பரிவர்த்தனை என்றார்கள். ஒருவாரம் மின்சாரம் இல்லை. எப்படி செல்போனில் பணம் பரிவர்த்தனை செய்வது. இதைத்தான் வளர்ச்சி என்று கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டை மத்திய அரசு கண்டு கொள்ளாது. மற்ற மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் உடனடியாக பிரதமர் சென்று பார்வையிட்டு நிவாரணம் அளிக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரும் ஆறுதல் கூறவில்லையே. அங்குள்ள மக்கள் அநாதை போன்று நிற்கிறார்கள். அந்த மண்ணில் உள்ள அமைச்சர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். நடிகர் விஷால் தியானம் செய்கிறார். அதுவும் தர்மயுத்தமோ என்னவோ?. தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். தற்போது தங்க காசு கொடுக்க போகிறார்களாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story