பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்- ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்


பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்- ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2017 12:07 AM GMT (Updated: 13 Dec 2017 12:07 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

பி.எஸ்.என்.எல். பணியாளர்களுக்கு 1-1-2017 முதல் 3 ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 2-வது ஊதிய குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். துணை டவர் நிறுவனம் உருவாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் படும் என்று அறிவிக்கப் பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

இந்த போராட்டத்தினால் ஈரோடு பிரப்ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம், காந்திஜிரோட்டில் உள்ள பொது மேலாளர் அலுவலகம் மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

1,050 பேர்

ஈரோடு பிரப்ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் வேலு, மணியன், பழனிவேலு, ஷாஜகான், சதாசிவம் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் கூறும்போது, “பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் என மொத்தம் 11 சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 1,050 பேர் பணிக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த போராட்டத்தினால் பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் முழுமையாக செயல்படவில்லை. மேலும், தொலைத்தொடர்பு குறித்த புகார்களை சரிசெய்யும் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பராமரிப்பு பணிகளும் பாதிக்கப்பட்டன”, என்றார்.

Next Story