வேலூர் அருகே கொத்தடிமையாக இருந்த பெண் மீட்பு


வேலூர் அருகே கொத்தடிமையாக இருந்த பெண் மீட்பு
x
தினத்தந்தி 13 Dec 2017 12:18 AM GMT (Updated: 13 Dec 2017 12:18 AM GMT)

வேலூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த பெண் மீட்கப்பட்டார்.

வேலூர்,

சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி வள்ளியம்மாள். இவர்கள் வேலூரை அடுத்த செட்டேரி பகுதியில் ஆனந்தன் என்பவருடைய செங்கல் சூளையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் முன்பணம் பெற்றுள்ளனர்.

பின்னர் தொடர்ந்து வேலை பார்த்து வந்த அவர்களில் குமார் சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் மட்டும் தனது 8 வயது மகனுடன் அங்கு வேலை பார்த்து வந்தார். பின்னர் அவரும் ஊருக்கு சென்றுவிட்டார். மீண்டும் வேலைக்குவரவில்லை.

பெண் மீட்பு

இந்த நிலையில் செங்கல்சூளை உரிமையாளர் ஆனந்தன் வள்ளியம்மாளை தொடர்பு கொண்டு தான் கொடுத்த முன்பணத்தை திருப்பி கொடுக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் மீண்டும் வேலைக்கு வருமாறும் கூறியிருக்கிறார். வள்ளியம்மாள் வேலைக்கு வராததால் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தொண்டு நிறுவனம் ஒன்றில் வள்ளியம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் தொண்டு நிறுவனத்தினர், வள்ளியம்மாளை செங்கல்சூளைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வள்ளியம்மாளை வேலைக்கு வருமாறு தொந்தரவு செய்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

மேலும் வள்ளியம்மாளுக்கு வேலூர் உதவி கலெக்டர் செல்வராஜ், விடுதலை சான்றிதழ் மற்றும் ரூ.2 ஆயிரம், துணிகள் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். 

Next Story