தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தை கொடூரக்கொலை தந்தை கைது


தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தை கொடூரக்கொலை தந்தை கைது
x
தினத்தந்தி 19 Dec 2017 4:45 AM IST (Updated: 19 Dec 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு குழந்தையை காணவில்லை எனக்கூறி நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ளது கல்லங்காட்டு வலசு. இங்குள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 26). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி தனலட்சுமி.

இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனலட்சுமிக்கு கடந்த 6-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு தனலட்சுமியுடன் பச்சிளம் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணாது தனலட்சுமி திடுக்கிட்டார். இதுபற்றி தனலட்சுமி தனது கணவர் பூபதியிடம் கூறினார். பூபதியும், தனலட்சுமியும் குழந்தையை தேடினார்கள். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று பூபதி புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் பூபதி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதன்பிறகு பூபதியை தனியாக அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது வீட்டில் தனலட்சுமியுடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை பூபதி தூக்கிச்சென்று தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்து விட்டு குழந்தையை காணவில்லை எனக்கூறி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து பூபதியை போலீசார் கைது செய்தனர்.

பூபதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

விசைத்தறி தொழிலாளியான பூபதி திருமணத்துக்கு முன்பே வேலைக்கு சரியாக செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். எனவே பூபதியை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் அவர் திருந்தவில்லை. இதன்பின்னர் பூபதிக்கும், தனலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. அதன்பிறகும் பூபதி வேலைக்கு செல்லாமல் இருந்தார். அப்போதும் பெற்றோர் அவரை கண்டித்தனர். பெண் குழந்தை பிறந்துள்ளது, இப்படி ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறாயே, குழந்தைக்கு பால் வாங்க பணத்துக்கு எங்கு செல்வாய்? என்று கூறி சத்தம் போட்டனர்.

மேலும் பூபதி ஏற்கனவே வேலைபார்த்த விசைத்தறி கூடத்தின் உரிமையாளர் ஒருவர் பூபதியை சந்தித்து வேலைக்கு வருகிறாயா? பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாயே என்று கூறியுள்ளார்.

தான் வேலைக்கு செல்லாமல் இருப்பதை பார்த்து பெற்றோர் கண்டிக்கிறார்கள், குழந்தைக்கு பால் வாங்கக்கூட பணம் இல்லையே என நினைத்து வேதனை அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பூபதி குழந்தையை கொலை செய்ய துணிந்தார். எனவே நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தனலட்சுமியுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கிச்சென்று அருகில் உள்ள ஒருவரது வீட்டின் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார். தனலட்சுமி தூங்கி எழுந்து குழந்தையை தேடியபோது தானும் தனலட்சுமியுடன் சேர்ந்து குழந்தையை தேடுவது போல் நாடகமாடி உள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது பூபதி தனது குழந்தையை கொன்றது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். பூபதியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிறந்து 11 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story