2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை: சேலத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை: சேலத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2017 10:30 PM GMT (Updated: 21 Dec 2017 8:21 PM GMT)

2 ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை செய்யப்பட்டதையொட்டி சேலத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சேலம்,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இதை வரவேற்று சேலத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு தி.மு.க. மாநகர துணைச்செயலாளர் கணேசன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. மேலும் அந்த வழியாக பஸ்களில் சென்ற பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக அண்ணா சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சூரமங்கலம்

இதில், துணைச்செயலாளர் லதா சேகர், மாநகர பொருளாளர் ஷெரீப் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் 32-வது வார்டு துணைச்செயலாளர் முகமது அலி தலைமையில் திருவள்ளுவர் சிலை அருகே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

சேலம் சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தி.மு.க.வினர் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கண்ணன், அசோகன், சையது முகமது, மாதேஸ்வரன், தமிழ்ச்செல்வன், பழனிவேல், காஜா முகமது, வன்னியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story