திருவொற்றியூரில் தண்டவாள பராமரிப்பு பணியால் பொதுமக்கள் அவதி


திருவொற்றியூரில் தண்டவாள பராமரிப்பு பணியால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 22 Dec 2017 9:30 PM GMT (Updated: 22 Dec 2017 7:17 PM GMT)

திருவொற்றியூரில் தண்டவாள பராமரிப்பு பணியால் பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான அண்ணாமலை நகர், கார்க்கில் நகர் உள்ளிட்ட 15 நகர்களில் வசிக்கும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் அண்ணாமலைநகர் ரெயில்வே கேட் வழியாக திருவொற்றியூர் பகுதிக்கு இருசக்கர வாகனங்கள், பஸ்கள், கார்களில் சென்று வருவார்கள்.

இந்தநிலையில் அண்ணாமலை நகர் ரெயில்வே கேட்டை கடக்க போட்டுள்ள கான்கிரீட் சாலை மற்றும் தண்டவாளம் பழுதடைந்து விட்டதால் அதனை மாற்றும் பணி கடந்த 20-ந்தேதி முதல் இன்று(சனிக்கிழமை) மாலை வரை நடைபெறுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரெயில்கள் அந்த வழியாக மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அந்த பகுதியில் ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டதால் அதன் வழியாக திருவொற்றியூர் சென்று வந்த பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் சுமார் 2 கி.மீ சுற்றி சென்று வருகின்றனர். இதனால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் பராமரிப்பு பணியை முடித்து கேட்டை திறக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story