மாநிலம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் போலி ரே‌ஷன் கார்டுகள் ரத்து மந்திரி யு.டி.காதர் தகவல்


மாநிலம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் போலி ரே‌ஷன் கார்டுகள் ரத்து  மந்திரி யு.டி.காதர் தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2017 10:00 PM GMT (Updated: 22 Dec 2017 8:12 PM GMT)

மாநிலம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் போலி ரே‌ஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மந்திரி யு.டி.காதர் தெரிவித்தார்.

குடகு,

மாநிலம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் போலி ரே‌ஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மந்திரி யு.டி.காதர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவது குறித்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி யு.டி.காதர் தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் ஸ்ரீவித்யா, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லத்தீஷ், மாவட்ட உணவு வழங்கல்–பொது வினியோக துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடக மாநிலம் முழுவதும் புதிய ரே‌ஷன் கார்டுகள் கேட்டு இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். அதில் முகவரி உள்ளிட்ட சில தகவல்கள் தவறாக இருந்ததாக கூறி சுமார் 1¼ லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

10 லட்சம் போலி ரே‌ஷன் கார்டுகள் ரத்து

குடகு மாவட்டத்தில் மட்டும் புதிய ரே‌ஷன் கார்டுகள் வழங்க கோரி 7,122 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதில் 5,374 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. மீதி விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கடந்த 4 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10 லட்சம் போலி ரே‌ஷன் கார்டுகளை அதிகாரிகள் கண்டுப்பிடித்து ரத்து செய்து உள்ளனர். இதேபோல் போலி ரே‌ஷன் கார்டுகள் குறித்து தகவல்கள் தெரிவிக்கும் நபர்களுக்கு சன்மானமாக தலா ரூ.400 வீதம் அவர்களது வங்கி கணக்கில் அரசு செலுத்தி வருகிறது.

தற்போது ரே‌ஷன் கார்டுகள் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் பயோ–மெட்ரிக் திட்டம் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உணவு வழங்கல் துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story