கவர்னர் மீது விரைவில் வழக்கு தொடர உள்ளேன், டிராபிக் ராமசாமி பேட்டி


கவர்னர் மீது விரைவில் வழக்கு தொடர உள்ளேன், டிராபிக் ராமசாமி பேட்டி
x
தினத்தந்தி 22 Dec 2017 9:50 PM GMT (Updated: 22 Dec 2017 9:50 PM GMT)

மாவட்டந்தோறும் ஆய்வு நடத்தும் கவர்னர் மீது விரைவில் வழக்கு தொடர உள்ளேன் என்று சேலத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறினார்.

சேலம்,

சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ‘சர்வோதயம் மறுமுழக்கம்‘ என்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாலையோரம் பேனர் வைப்பதற்கு தடைவிதிக்க கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். தற்போது உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்துடன் பேனர் வைக்க தடையில்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக என்னிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது உரிய விதிகளின் அடிப்படையில் பேனர் வைக்க கோர்ட்டு அனுமதி வழங்கலாம் என்று தெரிவித்தேன்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேர்மையற்ற முறையில் தான் நடந்துள்ளது. தேர்தல் ஆணையமும், தேர்தலை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தோடு தான் நடத்தி முடித்துள்ளது. மக்கள் நியாயமான முறையில் தீர்ப்பளித்திருப்பார்கள் என நம்புகிறேன். அங்கு தி.மு.க. அல்லது தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கலாம்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை தற்போது நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர் சிகிச்சை பெறும் வீடியோ வெளியிடப்பட்டதை தவறு என்று கூறமுடியாது. மக்கள் பார்வைக்கு வந்தது நல்ல விஷயம் தான். மேலும் அனைத்து வீடியோக்களையும் வெளியிட வேண்டும். தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் பொதுத்தேர்தல் வரும். நிரந்தர சின்னம் என்பது யாருக்கும் இருக்க கூடாது. அதற்கு எதிராக போராடுவேன்.

சமீபகாலமாக மாவட்டந்தோறும் தமிழக கவர்னர் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். ஆய்வு செய்ய அவருக்கு அதிகாரமே கிடையாது. இந்த ஆய்வு சட்ட விரோதமாகும். தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு உள்ளது. அவர்களை கேட்காமல் கவர்னர் ஆய்வு நடத்த கூடாது. இது மக்கள் விரோத செயல் என்பதால் கவர்னர் மீது விரைவில் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story