அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன


அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 31 Dec 2017 11:15 PM GMT (Updated: 31 Dec 2017 8:39 PM GMT)

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லவேண்டிய ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

அரக்கோணம்,

சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சென்னையில் இருந்து 6.15 மணிக்கு புறப்பட்டது. ரெயில் அரக்கோணத்தை அடுத்த மோசூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் மற்றும் அதிர்வு வருவதை என்ஜின் டிரைவர் அறிந்து ரெயிலை மெதுவாக இயக்கினார்.

பின்னர் ரெயில் மோசூர் ரெயில் நிலையத்தில் 7.05 மணிக்கு நிறுத்தப்பட்டது. என்ஜின் டிரைவர் சென்னை, அரக்கோணம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் மனோகரன் நடவடிக்கையின் பேரின் ரெயில்வே சிப்பந்திகள் மோசூர் ரெயில் நிலையம் சென்று தண்டவாளத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து விரிசலை தற்காலிகமாக சரிசெய்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து மெதுவாக புறப்பட்டு சென்றது. ரெயில் சென்றவுடன் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் சிப்பந்திகள் தண்டவாள விரிசலை முழுமையாக சரிசெய்தனர். வழக்கமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு 7.15 மணிக்கு வர வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 7.45 மணிக்கு வந்தது. ½ மணி நேரம் காலதாமதமாக வந்ததால் பயணிகள் அவதியடைந்தனர்.

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ஆவடியில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயில் 20 நிமிடம் தாமதமாக சென்றது. சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரெயில் என்ஜின் டிரைவர் சமார்த்தியமாக கண்டுபிடித்து ரெயிலை நிறுத்தியதால் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமார்த்தியமாக செயல்பட்ட ரெயில் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர், கார்டு ஆகியோரை ரெயில்வே அதிகாரிகள், பயணிகள் பாராட்டினார்கள். 

Next Story