ஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி


ஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 1 Jan 2018 10:30 PM GMT (Updated: 1 Jan 2018 9:30 PM GMT)

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்று இந்த பேராலயம் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் பசிலிக்கா என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பேராலயத்தின் விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் நள்ளிரவு 12 மணி அளவில் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்த விளக்கை ஏற்றி, ஆங்கில புத்தாண்டு பிறப்பை அறிவித்தார்.

கூட்டம் அலைமோதியது

இதை தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பிரபாகர், துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட், ஆண்டோ ஜெசுராஜ் உள்ளிட்ட பங்குதந்தையர்கள், சகோதரிகள் கலந்துகொண் டனர்.

சிறப்பு திருப்பலியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். புத்தாண்டையொட்டி நேற்று வேளாங்கண்ணியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நேற்று காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புத்தாண்டையொட்டி பேராலயம் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

புனித பாத்திமா ஆலயம்

நாகூரில் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை ஜெர்லின் கார்ட்டர் தலைமை தாங்கினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story