எட்டயபுரம் அருகே பயங்கரம்: லாரி டிரைவர் குத்திக் கொலை கொலையாளிக்கு போலீசார் வலைவீச்சு


எட்டயபுரம் அருகே பயங்கரம்: லாரி டிரைவர் குத்திக் கொலை கொலையாளிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Jan 2018 2:00 AM IST (Updated: 12 Jan 2018 6:51 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே, லாரி டிரைவர் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விளாத்திகுளம்,

எட்டயபுரம் அருகே, லாரி டிரைவர் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

லாரி டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி புது காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் முகேஷ்குமார் (வயது 23). லாரி டிரைவர். இவர் மீது கொலைமுயற்சி, கற்பழிப்பு, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மாசார்பட்டி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார்.

குத்திக்கொலை

பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில், முகேஷ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் வெளியில் வந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் தாப்பாத்தி– மாசார்பட்டி ரோட்டின் வலதுபுறம் உள்ள ஊருணியின் கரையில் அவர், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

காரணம் என்ன?

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட முகேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த இடத்தில் போலீஸ் மோப்ப நாய் மோப்பம் பிடித்தது. பின்னர் அது அங்கிருந்து தாப்பாத்தியில் உள்ள ஆலமரம் வரையிலும் ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முகேஷ்குமார் பல்வேறு வழக்குகளில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது இரவில் மது அருந்தியபோது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story