ஆடு மேய்க்கச்சென்றபோது பயங்கரம்: விவசாயி சுட்டுக்கொலை


ஆடு மேய்க்கச்சென்றபோது பயங்கரம்: விவசாயி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 15 Jan 2018 11:15 PM GMT (Updated: 15 Jan 2018 9:17 PM GMT)

பென்னாகரம் அருகே வனப்பகுதிக்கு ஆடு மேய்க்கச்சென்ற விவசாயி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோடுப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு என்கிற சின்னதம்பி (வயது 40), விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 13-ந்தேதி சேட்டு, அதேபகுதியை சேர்ந்த நண்பர்கள் சசிகுமார், கனகராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருடன் ஆடுகளை கோடுப்பட்டி வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.

அன்று இரவு வெகு நேரமாகியும் சேட்டு மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் செல்வி, தனது கணவருடன் சென்ற நண்பர்களிடம் கேட்டுள்ளார். அப்போது சேட்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த செல்வி இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

துப்பாக்கியால் சுட்டுக்கொலை

இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோடுப்பட்டி வனப்பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது நானாகுட்டப்பள்ளம் பகுதியில் சேட்டு உடலில் துப்பாக்கி குண்டு காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சேட்டு இறந்து கிடந்த இடத்தில் நாட்டுத்துப்பாக்கி ஒன்றும் கிடந்தது.

இதனால் மர்ம நபர்கள் சேட்டுவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனப்பகுதியில் கிடந்த நாட்டுத்துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். பின்னர், சேட்டுவின் உடலை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரமா?

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது சேட்டுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் சேட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த கணவன்-மனைவியை பிடித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்த இன்னொரு நாட்டுத்துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story