அரசு பஸ் மோதி 2 பேர் பலி வழக்கு பதிவு செய்ய தாமதம் ஆனதால் போலீஸ் நிலையம் முற்றுகை


அரசு பஸ் மோதி 2 பேர் பலி வழக்கு பதிவு செய்ய தாமதம் ஆனதால் போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 9:19 PM GMT)

துறையூர் அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலியானார்கள். வழக்கு செய்ய போலீசார் காலதாமதம் செய்ததால் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள காளியாம்பட்டியை சோந்தவர் ஆனந்த்(வயது33). திருமணமானவர். இவரை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சிறுமத்தூரில் வசித்து வரும் நண்பர் சின்னசாமி(45) சந்திக்க துறையூர் வந்தார். பின்னர் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு காளியம்பட்டியி்ல் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.

காளிப்பட்டி ரைஸ் மில் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி வந்துகொண்டு இருந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில், ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். சின்னசாமி துறையூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் செல்வகுமார் மற்றும் விபத்தில் இறந்த ஆனந்தின் அண்ணன் வேலன் ஆகியோர் தனித்தனியாக புகார் கொடுத்தனர். ஆனால், வழக்கு பதிவு செய்ய போலீசார் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தின் உறவினர்கள் துறையூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

போலீஸ் நிலைம் முன்பு பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். 

Next Story