மீனவர்கள் வலையில் மேலும் ஒரு ஆண் உடல் சிக்கியது அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை


மீனவர்கள் வலையில் மேலும் ஒரு ஆண் உடல் சிக்கியது அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 9:20 PM GMT)

குளச்சலில் கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் மேலும் ஒரு ஆண் உடல் சிக்கியது. அவரை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குளச்சல்,

குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30–ந் தேதி வீசிய ஒகி புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த ஏராளமான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள். அவர்களில் சிலரது உடல்கள் கேரளாவில் கரை ஒதுங்கின. இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

கேரள கடற்கரையில் கரை ஒதுங்கிய உடல்கள் மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கடந்த வாரம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, வலையில் ஒரு ஆண் உடல் சிக்கியது. அந்த உடல் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குளச்சல் மீனவர்கள் வலையில் மேலும் ஒரு ஆண் உடல் சிக்கியுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:–

குளச்சலை சேர்ந்த ஜெயசீலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த 11–ந் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு 33 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.  

அப்போது, அவர்களது வலையில் ஒரு ஆண் பிணம் சிக்கியது. இதையடுத்து மீனவர்கள் அந்த உடலை கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு கூடி பிணத்தை பார்வையிட்டனர். அந்த உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால், அடையாளம் காண முடியவில்லை. இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடலில் பிணமாக மீட்கப்பட்டவர் மீனவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் ஒகி புயலில் சிக்கி இறந்தவரா? அல்லது புயலுக்கு பின்பு குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்றபோது மாயமான 3 மீனவர்களில் ஒருவரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அந்த உடல் அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


Next Story