சேலம் அருகே கூலமேட்டில் உற்சாகம்: ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 484 காளைகள்


சேலம் அருகே கூலமேட்டில் உற்சாகம்: ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 484 காளைகள்
x
தினத்தந்தி 17 Jan 2018 11:00 PM GMT (Updated: 17 Jan 2018 7:00 PM GMT)

சேலம் அருகே கூலமேடு கிராமத்தில் நேற்று உற்சாகமாக நடந்த ஜல்லிக்கட்டில் 484 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் அந்த காளைகள் முட்டியதில் 46 பேர் காயம் அடைந்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி நேற்று ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடந்தது. இதற்காக கூலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானம் தயார் செய்யப்பட்டிருந்தது. சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகளை போட்டியில் பங்கேற்பதற்காக அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து பதிவு செய்தனர்.

அந்த மாடுகளுக்கு நோய் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், நோய் உள்ளிட்ட சில குறைபாடுகள் காரணமாக சில காளைகளுக்கு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் 484 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.

இதேபோல், மாடுபிடி வீரர்களில் 450 பேர் பதிவு செய்திருந்தனர். மருத்துவக்குழுவினர் அவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ததில், 127 வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டனர். மீதமிருந்த 323 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படாத வகையில் மைதானத்தில் தென்னைநார் கழிவுகள் பரப்பப்பட்டும், பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் காளைகள் சென்று விடாமல் இருக்க பாதுகாப்பு கம்பி வலைகள் கட்டப்பட்டும் இருந்தன. மேலும், காளைகள் களத்துக்கு செல்லும் வகையிலும், இதை பார்க்க பார்வையாளர்களுக்கு வசதி ஏற்படுத்தும் வகையிலும் இரண்டு அடுக்கு தடுப்புவேலி அமைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து சரியாக காலை 9.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதாவது, உச்சநீதிமன்றத்தால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கென அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவேன் எனவும், மாடுகளை துன்புறுத்த மாட்டோம் என்றும் வீரர்கள் உறுதிமொழியை வாசித்தனர். பின்னர், ஜல்லிக்கட்டை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. முதலில் வந்த கோவில் காளையை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர், மற்ற காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். ஆனால் காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் திமிறிக்கொண்டு ஓடின. சில இளைஞர்கள் காளைகளின் திமிலை பிடித்துக்கொண்டு சற்று தூரம் சென்றனர். மேலும், சில காளைகள் துள்ளிக் குதித்தபடி வீரர்களை முட்டி தள்ளி விட்டு ஆக்ரோஷமாக ஓடியன.

ஒவ்வொரு காளையும் களத்துக்கு வரும்முன், “ஒலி பெருக்கி மூலம் இந்த காளையை அடக்கினால் தங்கக்காசு, வெள்ளிக்காசு, குத்துவிளக்கு, சில்வர் பாத்திரம், செல்போன், ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்” என்றும், “2-க்கும் மேற்பட்ட வீரர்கள் சேர்ந்து காளைகளை பிடித்தால் அவர்களுக்கு பரிசு கிடையாது” என்றும் அறிவிக்கப்பட்டது. பரிசுகளை வெல்ல வேண்டும் என்று வீரர்கள் காளைகளை பிடிக்க முயன்றனர். ஆனால், காளைகள் திமிறிக்கொண்டு யாருக்கும் பிடிகொடுக்காமல் சென்றதையும், இதனால் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முடியாமல் திணறியதையும் காணமுடிந்தது.

இருப்பினும், துள்ளி குதித்த காளைகளை, அங்கிருந்த மாடுபிடி வீரர்கள் சிலர் மடக்கி பிடித்ததற்காகவும், வீரர்கள் பிடியில் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் குத்துவிளக்கு, குக்கர், மிக்சி, மின்விசிறி போன்ற பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில், ஆத்தூர் அருகே கீரிப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் அருண்குமார் (வயது 26), அரியலூரை சேர்ந்த ராஜூ (26), தம்மம்பட்டியை சேர்ந்த பிரதாப் (22), லோகேஸ்வரன் (26), குணா (21), கூடமலை நிசாந்த் (25), புங்கவாடி ராமசாமி (46), கடம்பூர் ராஜமாணிக்கம் (23), சேஷன்சாவடி குமரேசன் (20), நாகியம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (26), செந்தாரப்பட்டி வெங்கடேசன் (23) உள்பட 44 பேர் காயம் அடைந்தனர். பின்னர், லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் படுகாயம் அடைந்த வீரர்களை மேல்சிகிச்சைக்காக சேலம் மற்றும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, பார்வையாளர்கள் சிலரையும் மாடுகள் முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த மஞ்சினியை சேர்ந்த செல்வம், நாமக்கல்லை சேர்ந்த செல்வக்குமார் ஆகியோர் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கூலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து ரசித்து பார்த்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பாதுகாப்பு

காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு மாலை 4.40 மணிக்கு நிறைவடைந்தது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story