அனுமதியின்றி ஜல்லிக்கட்டு; போலீசார் தடுத்து நிறுத்தினர்


அனுமதியின்றி ஜல்லிக்கட்டு; போலீசார் தடுத்து நிறுத்தினர்
x
தினத்தந்தி 17 Jan 2018 10:45 PM GMT (Updated: 17 Jan 2018 7:26 PM GMT)

தொண்டமாந்துறையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு; போலீசார் தடுத்து நிறுத்தினர்

வேப்பந்தட்டை,

வேப்பந்தட்டை அருகே தொண்டமாந்துறையில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கிறிஸ்தவர்கள், அந்தோணியார் பொங்கல் விழாவை கொண்டாடினர். அந்த பொங்கலை முன்னிட்டு தங்கள் மாடுகளுக்கு பொங்கலிட்டு படைப்பது வழக்கம். அப்போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதென முடிவு செய்தனர். பின்னர் அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு தங்கள் வீட்டில் உள்ள மாடுகளையும், ஜல்லிக்கட்டு காளைகளையும் அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடத்தினர். இது குறித்து தகவல் தெரிந்த அரும்பாவூர் போலீசார் அங்கு விரைந்து வந்து ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தி, காளைகளை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதற்கு கிராம பொதுமக்கள், இது நாங்கள் பாரம்பரியமாக அந்தோணியார் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இருந்த போதிலும் அனுமதியில்லாமல் இதுபோன்று ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என போலீசார் கூறினர். இதனால் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வந்த காளைகளும், காளைகளை அடக்கவந்த வீரர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இச்சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story