ஜல்லிக்கட்டு: வேடிக்கை பார்த்த பூ வியாபாரி மாடு முட்டி பலி 23 பேர் காயம்


ஜல்லிக்கட்டு: வேடிக்கை பார்த்த பூ வியாபாரி மாடு முட்டி பலி 23 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Jan 2018 11:00 PM GMT (Updated: 17 Jan 2018 7:26 PM GMT)

வடமலாப்பூரில் நடந்த ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த பூ வியாபாரி மாடு முட்டியதில் பரிதாபமாக இறந்தார். இதில் 23 பேர் காயமடைந்தனர்.

நார்த்தாமலை,

புதுக்கோட்டை அருகே உள்ள வடமலாப்பூர் கிராமத்தில் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். இதைத்தொடர்ந்து சில நாட்களாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வந்தனர். தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி வாடிவாசலின் இருபுறமும் ஜல்லிக்கட்டு காளைகளை பிடிப்பவர்கள் தவிர மற்ற பார்வையாளர்கள் உள்ளே நுழைய முடியாதபடி தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் மாடுபிடி வீரர்கள் காயமடையாமல் இருக்க வாடிவாசலில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தேங்காய் நார்கள் போடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று வடமலாப்பூரில் உள்ள பிடாரியம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிக்கு காளைகளின் உரிமையாளர்கள் காளைகளை அலங்கரித்து வாடிவாசலுக்கு கொண்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை புதுக்கோட்டை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 195 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது அங்கு கூடிநின்ற பொதுமக்கள் விசில் அடித்தும், கை தட்டியும் உற்சாகப் படுத்தினர். இதில் சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 485 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப் பட்டன.

இந்நிலையில் வாடிவாசலில் இருந்து வெளியே சீறிப்பாய்ந்த காளை ஒன்று வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. அந்த காளை சில நிமிடங்கள் வரை களத்தில் மிரட்டியது. பின்னர் அங்கிருந்து சென்ற காளை பார்வையாளர்கள் கூட்டத்தில் திடீரென பாய்ந்தது. இதில் புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி ஜீவானந்தம் (வயது 42) கழுத்தை தனது கூரிய கொம்பால் குத்தி தூக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று அந்த காளையை துரத்தி விட்டனர். பின்னர் ஜீவானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் பலத்த காயமடைந்த 5 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பாத்திரங்கள், வெள்ளிநாணயம், கட்டில், பீரோ, சைக்கிள், குத்துவிளக்கு உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வடமலாப்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், வடமலாப்பூர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்கோகர்ணம் போலீசார் செய்திருந்தனர்.


Next Story