நெல்லையில் பரிதாபம்: கண் ஆஸ்பத்திரியில் நர்சு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


நெல்லையில் பரிதாபம்: கண் ஆஸ்பத்திரியில் நர்சு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 2 Feb 2018 9:30 PM GMT (Updated: 2 Feb 2018 7:04 PM GMT)

நெல்லையில் கண் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.இ

நெல்லை,

நெல்லையில் கண் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

நர்சு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த அருள் பிரகாசம் மகள் நிஷா மேரி (வயது 18). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள கண் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் 4–வது மாடியில் தன்னுடன் பணிபுரியும் மற்ற பெண்களுடன் தங்கி இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று இருந்த நிஷா மேரி நேற்று முன்தினம்தான் நெல்லைக்கு வந்தார். நேற்று காலையில் நிஷா மேரியுடன் தங்கி இருந்த மற்ற பெண்கள் பணிக்கு புறப்பட்டனர். அப்போது நிஷா மேரி, நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என்று அந்த பெண்களிடம் கூறினார்.

தூக்கில் பிணம்

உடனே மற்ற பெண்கள் வேலைக்கு சென்று விட்டனர். நீண்ட நேரம் ஆகியும் நிஷாமேரி பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மற்ற நர்சுகள் தங்கும் அறைக்கு சென்று பார்த்தனர்.

அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அறையில் உள்ள மின்விசிறியில் நிஷா மேரி தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலை பார்த்து ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் மற்ற நர்சுகள் கதறி அழுதது கண்கலங்க செய்தது. இதனால் ஆஸ்பத்திரியில் சோகம் நிலவியது.

உருக்கமான கடிதம் சிக்கியது

தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். நிஷா மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நிஷாமேரி தற்கொலை செய்து கொண்ட அறையை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நிஷாமேரி தங்கி இருந்த அறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு நிஷா மேரி உருக்கமாக எழுதி வைத்திருந்த 10 பக்க கடிதம் ஒன்று சிக்கியது.

அந்த கடிதத்தில், தனது பெற்றோருக்கு என்னோடு சேர்த்து 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தற்போது எனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. இதனால் குடும்பத்தை கவனிக்க என்னுடைய தந்தையால் முடியவில்லை. எனது குடும்பம் வறுமையில் கஷ்டப்பட்டு வருகிறது. எனவே, நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது. இதுதவிர தனது குடும்ப சூழ்நிலைகளை அந்த கடிதத்தில் நிஷாமேரி விரிவாக எழுதி உள்ளார்.

இது தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story