திருச்செந்தூர் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி முதியவர் சாவு


திருச்செந்தூர் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி முதியவர் சாவு
x
தினத்தந்தி 2 Feb 2018 8:30 PM GMT (Updated: 2 Feb 2018 7:44 PM GMT)

திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆழ்குழாய் கிணறு அமைத்தபோது...

தட்டார்மடம் அருகே தச்சன்விளையைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 70). இவர் கடற்கரை பகுதிகளில் கைகளால் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் தொழில் நடத்தி வந்தார்.

திருச்செந்தூரை அடுத்த ஆலந்தலை வடக்கு தெருவில் பிலேபியான் என்பவரது வீட்டில் கைகளால் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி கடந்த 2 நாட்கள் நடந்தது.

இந்த பணியில் மாடசாமி தலைமையில், தச்சன்விளையைச் சேர்ந்த கந்தசாமி (45), சரவணன், ஆறுமுகம், கண்ணன், சண்முகம், முருகேசன் ஆகிய தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நேற்று மதியம் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி முடிந்தவுடன், ஆழ்குழாயில் இருந்த நீளமான இரும்பு குழாயை வெளியே எடுத்தனர். அப்போது அந்த இரும்பு குழாயானது, அங்குள்ள மின்கம்பத்தின் வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது.

மின்சாரம் தாக்கி சாவு

இதனால் இரும்பு குழாய் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் மாடசாமி, கந்தசாமி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார். கந்தசாமிக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த மாடசாமிக்கு உலகம்மாள் என்ற மனைவியும், ஆறுமுகம், சுப்புலட்சுமி, சுந்தரி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

Next Story