நோய் தாக்கிய நெற்கதிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள்


நோய் தாக்கிய நெற்கதிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 2 Feb 2018 11:00 PM GMT (Updated: 2 Feb 2018 8:58 PM GMT)

நோய் தாக்கிய நெற்கதிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் அதனை வேளாண்மை துறை ஆணையரிடம் காட்டி நிவாரணம் கேட்டனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணிகண்டம், அந்தநல்லூர், லால்குடி, முசிறி வட்டாரங்களில் விவசாயிகள் சம்பா பின் நடவாக ஆந்திரா பொன்னி என்ற நெல்லை அதிக அளவில் சாகுபடி செய்து இருந்தனர். இந்த நெற்பயிர்களில் கதிர் தள்ளி அறுவடைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் திடீர் என ஒரு விதமான நோய் தாக்கி உள்ளது.

நோய் தாக்கிய நெற்கதிர்கள் அனைத்தும் பதராகி போய்விட்டன. இப்படி பதர் ஆகி போன நெற்கதிர்களுடன் விவசாயிகள் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயிகள் அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது அங்கு ஆய்வு பணிக்காக வந்த தமிழக அரசின் வேளாண்மை துறை ஆணையர் தட்சிணாமூர்த்தியிடம் நோய் தாக்கிய நெற்கதிர்களை காட்டி தங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும் என்றும், ஆந்திரா பொன்னி வகை நெல்லில் ஆண்டுதோறும் இதுபோன்ற நோய் தாக்குதல் நடப்பதால் எதிர்காலத்தில் ஆந்திரா பொன்னி விதை நெல் விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

விவசாயிகளின் கருத்துகளை கேட்ட வேளாண்மை துறை ஆணையர், நோயினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் பற்றி வட்டாரந்தோறும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணக் கெடுத்து அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

Next Story