‘ஆன்லைன்’ பத்திரப்பதிவு சேவை: இணையதள மையம் நடத்துபவர்களுக்கு பயிற்சி


‘ஆன்லைன்’ பத்திரப்பதிவு சேவை: இணையதள மையம் நடத்துபவர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 17 Feb 2018 10:00 PM GMT (Updated: 17 Feb 2018 5:52 PM GMT)

இணையதள மையம் நடத்துபவர்கள் பயிற்சி தேவைப்பட்டால் அருகில் உள்ள மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

‘ஆன்லைன்’ பத்திரப்பதிவு நடைமுறைக்காக ஸ்டார் 2.0 என்ற மென்பொருளை கடந்த 12–ந்தேதி முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த புதிய மென்பொருளில் ஆவணங்களை பொதுமக்களே தயார் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.  

கடந்த 15–ந்தேதி வரை 13 ஆயிரத்து 557 ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சார்பதிவாளர்களுக்கு முன் சரிபார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 680 ஆவணங்கள் முன்சரிபார்ப்பு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 7 ஆயிரத்து 875 ஆவணங்கள் பொதுமக்களால் அச்சுப்பிரதி எடுக்கப்பட்டு பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டன. ஆவணம் உருவாக்குதல் தற்போது எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இணையதளம் வழியாக சிறிது பயிற்சி உள்ளவர்கள் எளிதாக ஆவணத்தை தயாரிக்க இயலும். 

எனவே ‘இன்டர்நெட் சென்டர்கள்’ (இணையதள மையம்) ஆவணங்கள் தயாரித்து வழங்குவதில் தங்களுடைய பங்களிப்பை பொதுமக்களுக்கு அளிக்கலாம். இணையதள மையம் நடத்துபவர்கள் தங்களுக்கு பயிற்சிகள் தேவைப்பட்டால் அருகில் உள்ள மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த சேவைகளை கிராமப்புற மக்களுக்கும், கணினி பயிற்சி இல்லாதவர்களுக்கும் எடுத்து செல்வதில் இணையதள மையங்கள் தங்களுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story