போலி கல்வி சான்றிதழ் மூலம் பணிக்கு சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு


போலி கல்வி சான்றிதழ் மூலம் பணிக்கு சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 Feb 2018 10:15 PM GMT (Updated: 18 Feb 2018 7:28 PM GMT)

போலி கல்வி சான்றிதழ் மூலம் பணிக்கு சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கனமாத்தம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் கடந்த 2015-ம் ஆண்டு கரூர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் கல்யாண சுந்தரத்தின் கல்வி சான்றிதழை அதிகாரிகள் சோதனையிட்ட போது அது போலி சான்றிதழ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் கரூர் திருமாநிலையூர் போக்குவரத்து கழக பணிமனையின் நிர்வாக அதிகாரி பிலிப் ஜான்பீட்டர் புகார் செய்தார். அதன்பேரில் டிரைவர் கல்யாணசுந்தரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் கல்யாணசுந்தரம் மோசடி செய்து பணிக்கு சேர்ந்தது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், “கல்யாணசுந்தரத்தின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் போலியாக உள்ளது. பணிக்கு சேர்ந்த போது இந்த சான்றிதழ்களை அவர் கொடுத்துள்ளார். ஊழியர்களின் சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்த போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. கல்யாணசுந்தரம் கடந்த ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை. போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்த விவரத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்களோ? என கருதி அவர் வரவில்லை என தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை கைது செய்வார்கள்” என்றார். 

Next Story