திருப்புல்லாணி அருகே பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மையை தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு


திருப்புல்லாணி அருகே பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மையை தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 19 Feb 2018 10:15 PM GMT (Updated: 19 Feb 2018 7:05 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது தினைக்குளம் கிராமம்.

ராமநாதபுரம்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டன. தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்த இந்த கட்டிடம் நாளடையில் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு பெயர்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் இப்பள்ளி கட்டிட தரம் குறித்து அறிந்த மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொதுப்பணித்து திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு மேற்பார்வை பொறியாளர் குமாரி ஷீலா நேரில் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு அறிக்கை அளித்தார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் தலைமை பொறியாளர், சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் மற்றும் மதுரை மண்டல தரக்கட்டுப்பாடு குழுவினர் கட்டிட உறுதித்தன்மையை பரிசோதித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி நேற்று முதல்கட்டமாக சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கான்கிரீட் தர ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் தினைக்குளம் அரசு பள்ளிக்கு வந்தனர். இவர்கள் பள்ளியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மை மற்றும் கட்டுமான பொருட்களின் அளவு போன்றவற்றை ஆய்வு செய்தனர். தூண்களில் நுண்கதிர்களை ஊடுருவ செய்து அதன் தன்மையை பரிசோதித்தனர். சிமெண்டு கலவை மற்றும் மண்ணின் தரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து 2 நாட்கள் வரை தங்கியிருந்து இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவினருடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தினகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், உதவி பொறியாளர் பாண்டியராஜன் ஆகியோர் உடன் சென்றனர். 

Next Story