திருச்செந்தூரில், யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா


திருச்செந்தூரில், யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா
x
தினத்தந்தி 19 Feb 2018 9:30 PM GMT (Updated: 19 Feb 2018 7:36 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, நேற்று மாலையில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது.

முன்னதாக வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் கோபாலகிருஷ்ணன் அய்யர், யானை மீது அமர்ந்து கொடிப்பட்டத்தை பிடித்தவாறு, எட்டு வீதிகளிலும் வலம் வந்து, மீண்டும் கோவிலை சேர்ந்தார்.

விழாவில் கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி, கோவில் உள்துறை கண்காணிப்பாளர்கள் ராஜ்மோகன், பத்மநாபபிள்ளை, 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை சங்க தலைவர் சிவராமலிங்கம், செயலாளர் அய்யனார், பொருளாளர் மாரியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 7-ம் திருநாளான 26-ந்தேதி மாலையில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திய கோலத்திலும், 8-ம் திருநாளான 27-ந்தேதி அதிகாலையில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்திய கோலத்திலும், மதியம் சுவாமி பச்சை சாத்திய கோலத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

10-ம் திருநாளான 1-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 11-ம் திருநாளான 2-ந்தேதி இரவில் தெப்ப திருவிழா நடக்கிறது. 12-ம் திருநாளான 3-ந்தேதி மஞ்சள் நீராட்டு திருவிழாவுடன் மாசி திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story