தஞ்சை-திருச்சி இருவழிப்பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு


தஞ்சை-திருச்சி இருவழிப்பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Feb 2018 11:00 PM GMT (Updated: 19 Feb 2018 7:48 PM GMT)

தஞ்சை-திருச்சி இடையேயான இருவழிப்பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நேற்று ஆய்வு செய்தார். அடுத்த மாதம்(மார்ச்) 31-ந்தேதிக்குள் இந்த பாதையில் ரெயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை-திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில் தஞ்சை-திருச்சி இடையிலான இரட்டை அகல ரெயில்பாதை பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது.

தஞ்சையில் இருந்து பொன்மலை வரை 49 கிலோ மீட்டர் தூரத்துக்கு செயல்படுத்த ரூ.450 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ. 190 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தஞ்சை-திருச்சி இடையே ஏற்கனவே மீட்டர்கேஜ் பாதை இருந்த வழித்தடத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புதிய வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதைகள் ஆகியவை அமைக்கப்பட்டன. மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள பூதலூர், சோளகம்பட்டி, திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டன. திருச்சி பொன்மலையில் இருந்து பணிகள் தொடங்கப்பட்டன. தஞ்சை மாவட்டம் சோளகம்பட்டி வரை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.

இதன் அடுத்தகட்டமாக தஞ்சை சோளகம்பட்டியில் இருந்து தஞ்சை வரை இரட்டை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்த பணி நிறைவு பெற்றதால் கடந்த 9-ம் தேதி தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை திருச்சியில் இருந்து 4 பேர் கொண்ட பொறியாளர் குழுவினர் 120 கி.மீ. வேகத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை நடத்தினர்.

இதை தொடர்ந்து நேற்று தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் தெற்கு மற்றும் தென்மேற்கு ரெயில்வே முதன்மை நிர்வாக அலுவலர்(கட்டுமானம்) சுதாகர்ராவ் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் 5 டிராலிகளில் சென்று சோதனை நடத்தினர். முன்னதாக தஞ்சை மேம்பாலம் அருகே பூஜைகள் நடத்தப்பட்டது. தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை இந்த சோதனை நடை பெற்றது.

முன்னதாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரையிலான இரட்டை அகல ரெயில்பாதையில் 35 கி.மீ தூரத்துக்கு சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில் தண்டவாளத்தின் உறுதித்தன்மை, தண்டவாளத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள சிலீப்பர் கட்டைகள், ரெயில்வே பெட்டிகள் தூய்மை செய்யும் தொழிற்கூடம், ரெயில்வே நிலையம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும்.

இன்று(செவ்வாய்க்கிழமை) தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை அதிவேக ரெயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்படும். இந்த சோதனையின் முடிவுகள் பெங்களூருவில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும். அங்கிருந்து இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படுவது குறித்து பரிந்துரை செய்யப்படும். இந்த பரிந்துரையின் அடிப்படையில் ரெயில்களை எப்போது இயக்குவது என்பதை தென்னக ரெயில்வே முடிவு செய்யும்”என்றார்.

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வின்போது ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவிப்பார். இதை எல்லாம் சீர் செய்த பின்னர் வரும் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story