டி.கல்லுப்பட்டி அருகே கோடரியால் தாக்கி சிறுமி கொலை: குடும்பத் தகராறில் தந்தை வெறிச்செயல்


டி.கல்லுப்பட்டி அருகே கோடரியால் தாக்கி சிறுமி கொலை: குடும்பத் தகராறில் தந்தை வெறிச்செயல்
x
தினத்தந்தி 19 Feb 2018 11:00 PM GMT (Updated: 19 Feb 2018 8:04 PM GMT)

மதுரை டி.கல்லுப்பட்டி அருகே குடும்பத்தகராறு காரணமாக கோடரியால் தாக்கி மகளை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்,

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வில்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது ராமநாதபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவருடைய மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு இருளாயி (10), வேல்முருகன் (6), மருது என்ற 8 மாத கைக்குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். முருகன் விவசாய வேலை செய்து வருகிறார்.

இருளாயி அருகில் உள்ள உவரி அரசு ஆரம்பப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் முருகன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்தாராம். இதனால் லட்சுமி கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன், தந்தை பெரியகருப்பன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்பு மீண்டும் நேற்றுமுன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனை சிறுமி இருளாயி, தனது தாத்தா பெரியகருப்பனிடம் கூறியதையடுத்து, அவர் வீட்டிற்கு வந்து முருகனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகள் இருளாயியை கோடரியால் பின் தலையில் தாக்கினார்.

அதில் இருளாயி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தாள். மகளின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த லட்சுமி, கணவரை தடுத்த போது, அவரையும் கோடரியால் முருகன் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதில் படுகாயமடைந்த லட்சுமி சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவல் அறிந்த பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசிவம், டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் மாலினி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயி முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story