பட்டிவீரன்பட்டி–சித்தரேவு இடையே ரூ.2 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணி


பட்டிவீரன்பட்டி–சித்தரேவு இடையே ரூ.2 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 19 Feb 2018 8:38 PM GMT (Updated: 19 Feb 2018 8:38 PM GMT)

பட்டிவீரன்பட்டி–சித்தரேவு இடையே ரூ.2 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணிகள் நடக்கிறது.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டியில் இருந்து அய்யம்பாளையம் வழியாக சித்தரேவு செல்ல சுமார் 12 கி.மீ. சாலை உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சாலை சேதமடைந்து காணப்பட்டது. பல இடங்களில் கற்கள் பெயர்ந்து சாலையில் பரவிக் கிடந்தது. அதுமட்டுமின்றி பெரிய அளவிலான பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன.

இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தன. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த சாலையை சீரமைக்க ரூ.2 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதன்படி சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக அய்யம்பாளையம்–சித்தரேவு மெயின் ரோட்டில் இருந்த பழைய நெல்லூர்பாலம் உள்பட 2 பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதுமட்டுமின்றி சித்தரேவில் உள்ள கோட்டைப்பட்டி முதல் டோல்கேட் வரை உள்ள 200 மீட்டர் தூரமுள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கும் பணிகள் வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடைய உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகளை ஆத்தூர் உதவி கோட்ட பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் ஜோதிபாசு மற்றும் சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story