சாலையோர கடைகள் நடத்த அனுமதி கோரி வியாபாரிகள் மனு


சாலையோர கடைகள் நடத்த அனுமதி கோரி வியாபாரிகள் மனு
x
தினத்தந்தி 19 Feb 2018 10:45 PM GMT (Updated: 19 Feb 2018 9:11 PM GMT)

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பகுதியில் சாலையோர கடைகள் நடத்த அனுமதி வழங்க கோரி வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் கறம்பக்குடி வாடகை கார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், கறம்பக்குடியில் எங்கள் வாடகை கார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கம் கடந்த 26 ஆண்டுகளாக கறம்பக்குடி பங்களா குளக்கரையில் இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு குளக்கரையில் பூங்கா மற்றும் குளத்தை சுற்றி நடைப்பாதை அமைப்பதாக கூறி, எங்களதுவாகனங்கள் நிறுத்தும் இடத்தை பஸ் நிலையம் பகுதிக்கு மாற்றினார்கள். இதைத்தொடர்ந்து நாங்கள் பஸ் நிலையத்தின் எதிர்புறம் வாகனங்களை நிறுத்தி வந்தோம். இந்த நிலையில் தற்போது அந்த இடத்தை மாற்ற போவதாக தெரியவந்தது உள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பங்களாகுளம் கீழக்கரையில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என கூறியிருந்தனர்.

கடைகள் நடத்த அனுமதி

புதுக்கோட்டை சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் உள்ள திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் தள்ளுவண்டியில் கடைகள் அமைத்து வியா பாரம் செய்து வருகிறோம். இந்த சாலையோர கடைகளை நம்பி சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது இந்த கடைகளை அகற்ற உள்ளதாக எங்களுக்கு தெரியவந்து உள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து, அதே பகுதியில் சாலையோர கடைகள் நடத்த எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

பாராளுமன்ற தொகுதி

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் சுரேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. மாவட்டத்தில் உள்ள திருமயம், ஆலங்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளை இணைத்து புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இதுவரை புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தனர். 

Next Story