ரசாயன முறையில் பழுக்க வைத்து வாழைப்பழங்கள் விற்பனை


ரசாயன முறையில் பழுக்க வைத்து வாழைப்பழங்கள் விற்பனை
x
தினத்தந்தி 22 Feb 2018 11:30 PM GMT (Updated: 22 Feb 2018 6:54 PM GMT)

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன முறையில் பழுக்க வைத்து வாழைப்பழங்கள் விற்கப்படுவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோயம்பேடு,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் அனைத்து வகையான வாழைப்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

நீண்டதூர பயண நேரத்தில் வாழைப்பழங்கள் பழுத்து அழுகிவிடும் என்பதால், விவசாயிகள் காய் வெட்டாக இருக்கும்போதே வாழைத் தார்களை வெட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

காயாக வரும் வாழைத்தார்கள் 2 அல்லது 3 நாட்கள் உரிய இடத்தில் இருப்பு வைத்து, இயற்கையாக பழுத்த பின்பு விற்பனை செய்யப்படும்.

ஆனால் சமீப காலமாக இருப்பு வைத்தால் உரிய நேரத்தில் பழங்களை வினியோகம் செய்ய முடிவதில்லை என்பதால், ‘ஈத்தலின்’ என்னும் ரசாயனத்தை தண்ணீரில் கலந்து, பெரிய பிளாஸ்டிக் தொட்டிகளில் வாழைத்தார்களை நிற்க வைத்து, குழந்தையை குளிப்பாட்டுவது போல வாழைத்தார்கள் மீது ரசாயனம் கலந்த தண்ணீரை ஊற்றி விடுகின்றனர்.

ரசாயன குளியல் போட்ட சிறிது நேரத்தில் அந்த வாழைத்தார்கள், மஞ்சள் நிறமாக மாறி பழுத்த பக்குவத்துக்கு மாறிவிடுகின்றன. அதன்பிறகு கோயம்பேடு மார்க்கெட்டில் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழக்கடைகளுக்கும் இந்த வாழைப்பழங்கள் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட இந்த வாழைப்பழங்களை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது.

மாம்பழ சீசனில் மட்டும் பெயரளவில் மாம்பழ கடைகளை சோதனை செய்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்து எத்தனை டன் அழித்தார்கள் என்று அறிக்கை தரும் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள், இதுபோல் ரசாயன முறையில் வாழைப்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதையும் தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழ கடைகளில் சோதனை நடத்தி அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் நேர்மையான பழ வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story