ஆகாயத்தாமரை செடியின் தண்டுகளுக்கு வர்ணம் பூசி விற்பனை


ஆகாயத்தாமரை செடியின் தண்டுகளுக்கு வர்ணம் பூசி விற்பனை
x
தினத்தந்தி 23 Feb 2018 10:00 PM GMT (Updated: 23 Feb 2018 9:34 PM GMT)

பரமத்திவேலூரில் ஆகாயத்தாமரை செடியின் தண்டுகளுக்கு வர்ணம் பூசி வண்ண பூச்செடி எனக்கூறி விற்பனை செய்த வடமாநிலத்தைச் சேர்நத 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்,

பரமத்தி வேலூரில் நேற்று காலை வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட 5 பேர் காவிரி ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரையை பறித்து அதன் இலைகளை துண்டித்து தண்டுகளில் பல்வேறு வண்ண சாயங்களை பூசி வண்ண பூச்செடிகள் என கூறி பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

இதில் சந்தேகம் அடைந்த சிலர் இது ஆகாயத்தாமரை என ஏமாற்றி விற்பனை செய்வதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மராட்டிய மாநிலம் நாந்திட் தாலுகா அர்தாபூர்பகுதியைச் சேர்ந்த பாலுசாய்ராம்முகத்தி (வயது 40) அவரது மனைவி தேவிகா (30), மகன் ராஜேஷ் (11), உறவினர்கள் விஜய் (16), ஆர்த்தி (10) ஆகியோர் என தெரியவந்தது.

இவர்கள் வேலைவாய்ப்பு ஏதும் இல்லாததால் கரூர் அருகே உள்ள வாங்கப்பாளையத்தில் தங்கி காவிரி ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை எடுத்து வந்து அதன் இலைகளை நீக்கிவிட்டு தண்டுகள் மீது பல்வேறு வண்ண சாயங்களை பூசி வண்ண பூச்செடிகள் என கூறி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்கள் விற்பனைக்கு வைத்து இருந்த வர்ணம் பூசிய ஆகாயத்தாமரை தண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story