அறுவடையில் ஆனந்தம்


அறுவடையில் ஆனந்தம்
x
தினத்தந்தி 25 Feb 2018 6:51 AM GMT (Updated: 25 Feb 2018 6:51 AM GMT)

கல்லூரி மாணவர்கள் சமூக நலனில் மிகுந்த அக்கறைகொண்டவர்களாக இருக்கிறார்கள். படிக்கும்போதே பலவிதங்களில் தங்கள் சமூக அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ல்லூரி மாணவர்கள் சமூக நலனில் மிகுந்த அக்கறைகொண்டவர்களாக இருக்கிறார்கள். படிக்கும்போதே பலவிதங்களில் தங்கள் சமூக அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருபகுதியாக நாட்டின் பல பகுதிகளில் நலிவடைந்த நிலையில் இருக்கும் விவசாயி களை சந்தித்து, அவர்களுக்கு புத்துணர்வு கொடுக்கும் விதமாக விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.

மேம்பட்ட பயிர் சாகுபடி முறை மூலம் மாணவர்களே பயிரை நட்டு வளர்த்து, அறுவடை செய்தும் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கிறார்கள். தாங்கள் விளைவித்த நெல்லை அரிசியாக்கி மதிய உணவாக சாப்பிட்டும் வருகிறார்கள்.

விவசாயத்தில் வித்தியாசத்தைக்காட்டும் இந்த மாணவ-மாணவிகள் மங்களூரு விலுள்ள டி.பி.எஸ்.பி. அரசு கல்லூரியை சேர்ந்தவர்கள். நாட்டுநலப்பணித்திட்ட இயக்கம் மூலம் இந்த விவசாய செயலை செய் திருக்கிறார்கள். இதற்காக கொனஜே என்ற கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்தை குத்தகைக்கு தேர்ந்தெடுத் திருக் கிறார்கள். அந்த நிலம் பல ஆண்டு களாக விவசாயம் செய்யாமல் புதர் மண்டி கிடந்திருக்கிறது. போதிய வருமானம் கிடைக்காததால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் விவ சாயத்தை கை விட்டுவிட்டு வேறு வேலை களுக்கு போய்விட்டார்கள்.

மாணவர்கள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, புனரமைக்கும் பணியில் ஈடுபட்டதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும், பஞ்சாயத்து உறுப்பினர்களும் மாணவர்களோடு கைகோர்த்திருக்கிறார்கள். மாணவர்களின் கடும் உழைப்பின் காரணமாக சில நாட்களிலேயே புதர்கள் மண்டிக்கிடந்த இடத்தை நெல் சாகுபடிக்கு ஏற்ற நிலப்பரப்பாக மாற்றிவிட்டார்கள்.

நெல் விதைகளை விதைத்தல், நாற்று வளர்த்தல், நாற்று நடுதல், களை பறித்தல், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல் என மாணவர்களின் கூட்டு முயற்சியில் நெற் பயிர் மளமளவென வளர்ந்துவிட்டது. நான்கு ஏக்கரில் அவர்கள் பயிரிட்டிருக்கிறார்கள். அவர்களே அறுவடையும் செய்தார்கள். மகசூல் அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இருந்திருக்கிறது. அவர்கள் அடுக்கிவைத்திருந்த நெல் மூட்டைகளின் எண்ணிக்கையை பார்த்து அக்கம்பக்கத்து விவசாயிகள் எல்லாம் வியப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

“விவசாயத்தை பற்றி மாணவர்களுக்கு தெளிவு ஏற்படவேண்டும். அவர்கள் விவசாயத்தை நேசிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை தொடங்கினோம். ஆனால் இதில் புதுமைபடைக்கும் விதத்தில் மாணவர்கள், தாங்கள் விளைவித்த அரிசியை உணவாகவும்உட்கொள்ளத்தொடங்கிவிட்டார்கள். படிப்பை முடித்ததும் மாணவர்கள் என்ன வேலைக்கு செல்லப்போகிறார்கள் என்பது தெரியாது. ஆனால் விவசாயத்தை பற்றியும், பயிர்கள் விளைச்சல் குறித்தும் அறிந்து கொண்டிருக்கிறார்கள். அது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிறார், கல்லூரி முதல்வர் ராஜசேகர் ஹெப்பர்.

விவசாய பணிகளில் ஈடுபட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம் கிடைத்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் இப்போதுதான் முதன் முதலாக விவசாய நிலங்களில் காலடி எடுத்துவைத்திருக் கிறார்கள்.

‘‘நான் இதற்கு முன்பு விவசாய நிலத்தில் வேலை பார்த்ததில்லை. நிறைய மாணவர்கள் ஆரம்பத்தில் கைகளில் அழுக்கு படியுமே என்று கவலைப்பட்டார்கள். ஆனால் வேலை செய்ய தொடங்கியதும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சந்தோஷமாக களப்பணியாற்றினார்கள். விவசாயிகள் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நாங்கள் உணர்வுப்பூர்வமாக தெரிந்து கொண்டோம்’’ என் கிறார், மாணவி நிகிதா.

இவர் ஞாயிற்றுக்கிழமைகளில் பல மைல் தூரம் பயணம் செய்து விவசாய பணி நடைபெற்ற கொனஜே கிராமத்திற்கு வந்திருக் கிறார். இவரை போல் பல மாணவர்களும் தூரமான இடங்களில் இருந்து வந்து, விவசாய பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்களும் குழுக்களாக பிரிந்து வேலைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்கள், பேராசிரியர்களின் கூட்டு விவசாய முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது.

Next Story