தனுஷ்கோடி கடற்கரையில் ஒரே நாளில் 1,304 ஆமை முட்டைகள் சேகரிப்பு


தனுஷ்கோடி கடற்கரையில் ஒரே நாளில் 1,304 ஆமை முட்டைகள் சேகரிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2018 9:45 PM GMT (Updated: 25 Feb 2018 6:42 PM GMT)

தனுஷ்கோடி கடற்கரையில் ஒரே நாளில் 1,304 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரை ஆமைகள் முட்டையிட்டு சென்றுள்ளதா என்பதை கண்டறிந்து தேடும் பணியில் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எம்.ஆர்.சத்திரம், கம்பிப்பாடு, அரிச்சல்முனை உள்ளிட்ட 8 இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 1,304 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர்.

சேகரித்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் மணலில் பாதுகாப்பாக புதைத்து வைத்தனர். மேலும் ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த முட்டைகளில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகள் சிலவற்றையும் கடலில் விட்டனர்.

இதுபற்றி வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:- தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் ஆமைகள் இட்டுச்சென்ற 1,304 முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிப்பதற்காக பொரிப்பகத்தில் வைத்துள்ளோம்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி 25-ந் தேதி வரை மட்டும் தனுஷ்கோடி கடற்கரையில் பல்வேறு இடங்களில் ஆமைகள் இட்டு சென்றதில் 9,000 ஆமை முட்டைகள் சேகரித்து குஞ்சு பொரிப்பதற்காக பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 504 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுஉள்ளன. இன்னும் 2 மாதம் வரை ஆமைகள் முட்டையிடும் சீசன் உள்ளதால் இந்த ஆண்டு அதிகஅளவில் ஆமை முட்டைகள் சேகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story