தொடர் விடுமுறை இல்லாததால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது


தொடர் விடுமுறை இல்லாததால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
x
தினத்தந்தி 25 Feb 2018 11:00 PM GMT (Updated: 25 Feb 2018 9:06 PM GMT)

தொடர் விடுமுறை இல்லாததால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறைக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் அருவிகளில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்கள்.

இந்தநிலையில் தொடர் விடுமுறை இல்லாததால் நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைய தொடங்கியது வார விடுமுறையான நேற்று வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் குறைவான சுற்றுலா பயணிகளே ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு, மெயின் அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் தேங்கி நின்ற தண்ணீரில் குளித்தனர்.

மேலும் அவர்கள் காவிரி ஆற்றில் பாறைகளுக்கு இடையே பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் தொங்கு பாலம், மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் பஸ் நிலையம், மசாஜ் செய்யும் இடம், உணவகங்கள், மீன் கடைகள் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி போலீசார், ஊர்க்காவல் படையினர் மணல் திட்டு, ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வந்தது. இதேநிலை தொடர்ந்தால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். 

Next Story