ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம்: லாரி ஷெட் உரிமையாளரின் 3 நாள் போலீஸ் காவல் முடிந்தது


ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம்: லாரி ஷெட் உரிமையாளரின் 3 நாள் போலீஸ் காவல் முடிந்தது
x
தினத்தந்தி 26 Feb 2018 10:45 PM GMT (Updated: 26 Feb 2018 5:39 PM GMT)

ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாட இடம் கொடுத்த லாரி ஷெட் உரிமையாளர் வேலுவிடம் 3 நாள் போலீஸ் காவல் முடிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

பூந்தமல்லி,

பூந்தமல்லி அருகே மாங்காட்டை அடுத்த மலையம்பாக்கத்தில் கடந்த 6-ந்தேதி இரவு பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாளை 150-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் 75 ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அப்போது முக்கிய ரவுடிகளான பினு அவனது கூட்டாளிகள் கனகு, விக்கி உள்ளிட்ட பலர் தப்பி சென்று விட்டனர். அங்கு இருந்த பயங்கர ஆயுதங்கள், செல்போன்கள், வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த பினு, அவனது கூட்டாளிகள், அவர்கள் பிறந்தநாள் கொண்டாட இடம் கொடுத்த லாரி ஷெட் உரிமையாளர் வேலு ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து கடந்த 13-ந்தேதி பினு அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து தேடப்பட்டு வந்த லாரி ஷெட் உரிமையாளர் வேலுவும் கடந்த 14-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவர் மீது ரவுடிகளுக்கு இடம் கொடுத்தது மற்றும் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்து இருந்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து போலீசார் லாரி ஷெட் உரிமையாளர் வேலுவை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மாங்காடு போலீசார் கேட்டுக்கொண்டதன்பேரில் நீதிபதி, அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதனால் அவரை மாங்காடு போலீசார் கடந்த 3 நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று வேலுவுக்கு போலீஸ் காவல் முடிந்தது.

வேலுவிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது குறித்து போலீசார் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக லாரி ஷெட் நடத்தி வந்த வேலு பழைய கார், லாரிகளை கொண்டு வந்து அதனை சரி செய்து விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது சில மாதம் சூளைமேட்டில் தங்கி இருந்த போது பினு மற்றும் அவரது கூட்டாளி கனகுவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

இதனால் கனகு அடிக்கடி அந்த லாரி ஷெட்டுக்கு வந்துள்ளார். அப்போதுதான் பினுவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டும் அதற்கு இந்த இடம் வேண்டும் என கனகு கேட்டுள்ளார். வேலுவும் அதற்கு இடம் கொடுத்து உள்ளார்.

ஆனால் இவ்வளவு ரவுடிகள் வருவார்கள் என்று தெரியாது என்றும் குடிக்க இடம் கேட்டு எனது குடியை கெடுத்து விட்டார்கள் என்றும் விசாரணையில் வேலு தெரிவித்தார். பறிமுதல் செம்மரக்கட்டைகள் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

வேலு நேற்று உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். நீதிபதி அவரை 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Next Story