பத்திரப்பதிவு செய்ய வக்கீலிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம்: சார்பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை


பத்திரப்பதிவு செய்ய வக்கீலிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம்: சார்பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 7 March 2018 10:15 PM GMT (Updated: 7 March 2018 8:56 PM GMT)

நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்க வக்கீலிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக் கில் சார்பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் வக்கீல் வையாபுரி (வயது 60). இவர் தனது நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக கடந்த 2001-ம் ஆண்டில் பரமத்தி வேலூர் சார்பதிவாளராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியன் (65) என்பவரிடம் விண்ணப்பம் செய்தார்.

அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட பாலசுப்பிரமணியன், பத்திரப்பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத வக்கீல் வையாபுரி, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி, கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி பரமத்தி வேலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் பாலசுப்பிரமணியனிடம் வக்கீல் வையாபுரி, ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.

3 ஆண்டுகள் சிறை

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் பாலசுப்பிரமணியனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சார்பதிவாளர் பாலசுப்பிரமணியனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கருணாநிதி தீர்ப்பு கூறினார். 

Next Story