கன்னியாகுமரியில் ரோந்து சென்ற போது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுருண்டு விழுந்து சாவு


கன்னியாகுமரியில் ரோந்து சென்ற போது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுருண்டு விழுந்து சாவு
x
தினத்தந்தி 8 March 2018 10:15 PM GMT (Updated: 8 March 2018 9:33 PM GMT)

கன்னியாகுமரியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். ஓய்வு பெற ஒரு மாதமே இருந்த நிலையில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி,

தக்கலை அருகே உள்ள பரக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 58). தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். இவருக்கு கன்னியாகுமரியில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ராமச்சந்திரன், 80 போலீசாருடன் கன்னியாகுமரி பேரூராட்சிக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் தங்கி இருந்து பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ராமச்சந்திரன் திடீரென ‘நெஞ்சு வலிக்கிறது’ என கூறியப்படி சுருண்டு விழுந்தார். இதை கண்ட மற்ற போலீசார் அவரை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்த ராமச்சந்திரனுக்கு மீரா சிஞ்சுபாய் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமச்சந்திரன் பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் ஒரு மாதமே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story