ரேஷன் கடையில் தீ விபத்து அரிசி மூட்டைகள் எரிந்து நாசம்


ரேஷன் கடையில் தீ விபத்து அரிசி மூட்டைகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 8 March 2018 10:30 PM GMT (Updated: 8 March 2018 9:34 PM GMT)

கரூர் அருகே ரேஷன் கடையில் தீ விபத்து அரிசி மூட்டைகள் எரிந்து நாசம்.

கரூர்,

கரூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் ரேஷன் கடை பழைய இனாம் கரூர் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கரும்புகை வெளியேறியது. சில நிமிடங்களில் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதியினர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 88 ரேஷன் அரிசி மூட்டைகளில் 53 மூட்டைகள் எரிந்து நாசமானது. மேலும் 918 காலி சாக்குகள் தீயில் எரிந்தது. தீயை அணைக்கும் போது சர்க்கரை மூட்டைகள் மீதும் தண்ணீர் அடிக்கப்பட்டதால் அதில் இருந்த சர்க்கரைகள் நாசமாகின. தீ விபத்தில் மொத்த சேதமதிப்பை கணக்கெடுக்கும் பணியை ரேஷன் கடை விற்பனையாளர்கள் மேற்கொண்டனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பசுபதிபாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story