இரட்டை ரெயில் பாதை மலையை குடைந்து அமைப்பதற்கு மாற்றாக நெடுஞ்சாலையோரம் தண்டவாளம் அமைக்கும் பணி


இரட்டை ரெயில் பாதை மலையை குடைந்து அமைப்பதற்கு மாற்றாக நெடுஞ்சாலையோரம் தண்டவாளம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 8 March 2018 10:45 PM GMT (Updated: 8 March 2018 9:37 PM GMT)

வையம்பட்டி அருகே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மலையை குடைந்து அமைப்பதற்கு மாற்றாக தேசிய நெடுஞ்சாலை அருகே தண்டவாளம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி யுள்ளது.

வையம்பட்டி,

தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தென் மாவட்டத்திற்கு இருமார்க்கத்திலும் செல்லும் ரெயில்களின் பிரதான வழித்தடமாக மணப்பாறை விளங்கி வருகிறது. தினமும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்போது ரெயில் களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படும்.

மணப்பாறை, வையம்பட்டி, கல்பட்டி சத்திரம், அய்யலூர், வடமதுரை, திண்டுக்கல் வழியாக ரெயில்கள் செல்லும் நிலையில் சமீபத்தில் இந்த வழித்தடத்தில் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் சில இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சியில் இருந்து கல்பட்டி சத்திரம் வரை இரண்டாவது ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கல்பட்டி சத்திரத்தில் இருந்து வடமதுரை வரை இரண்டாவது ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தொங்கு பாலம்

வையம்பட்டியை அடுத்த இனாம்புதுவாடி ஊராட்சியில் தொங்குபாலம் அமைந்துள்ளது. இந்த தொங்கு பாலத்தில் இருந்து சுமார் 150 அடி பள்ளத்தில் ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இது மலைகளுக்கு நடுவில் ரெயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இதே போல் மலைகளுக்கு நடுவில் ரெயில் செல்வதுடன் தூண்கள் இன்றி இங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் இது தொங்கு பாலம் என அழைக்கப்படுகிறது. ரெயில் பயணிகள் தொங்கு பாலத்தை கடந்து செல்லும் போது ஏதோ மலைப்பிரதேசத்தில் பயணிப்பது போன்ற உணர்வை பெற முடியும். இந்நிலையில் தற்போது இரண்டாவது ரெயில்வே தண்ட வாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தொங்கு பாலம் பகுதியில் இரண்டாவது ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டுமானால் மீண்டும் மலையை குடைந்து செல்ல வேண்டும். அதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பணிகளும் இழுத்துக்கொண்டே போகும்.

ரெயில் சோதனை ஓட்டம்

ஆகவே தொங்குபாலத்தில் இரண்டாவது ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணியை கைவிட்டுவிட்டு அதற்கு பதிலாக திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைத்திட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்டவாளம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் ரெயில் சோதனை ஓட்டமும், இனாம்புதுவாடி பகுதியில் நடைபெற உள்ளது.

திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சற்று தூரத்தில் ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்படுவது இந்த பகுதியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story