மராட்டியத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ்


மராட்டியத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ்
x
தினத்தந்தி 8 March 2018 10:43 PM GMT (Updated: 8 March 2018 10:43 PM GMT)

மராட்டியத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சட்டசபையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி பேசினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபையில் நேற்று முன்தினம் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் மக்கள் மண்எண்ணெய் மட்டுமின்றி விறகு, மாட்டு சாணம் போன்றவற்றை சமையல் செய்ய பயன்படுத்துகின்றனர். ஆனால் மும்பை போன்ற பெருநகரங்களில் கியாஸ் சிலிண்டர் இல்லாத ஏழை எளிய மக்கள் முழுக்க முழுக்க மண்எண்ணெயை மட்டும் தான் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே தற்போது குடும்பத்திற்கு வழங்கி வரும் 4 லிட்டர் மண்எண்ணெயை மீண்டும் 24 லிட்டராக உயர்த்தி வழங்கவேண்டும்.

இதேபோல தற்போது அன்ன சுரக்ஜா திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரத்திற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு ரூ.2-க்கு கிலோ கோதுமையும், ரூ.3-க்கு கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. அன்ன சுரக்ஜா திட்ட பயனாளர்களுக்கான குறைந்தப்பட்ச ஆண்டு வருமானத்தை ரூ.1 லட்சமாக உயர்த்தவேண்டும்.

இதேபோல கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மராட்டியர்கள் அல்லாத பிற மாநிலத்தவருக்கு சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். அப்போது சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் பட்டோலே சாதி சான்றிதழ் விவகாரத்தில் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடுவதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது வரை பிறமாநிலத்தவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே இந்த விவகாரத்தில் அரசு வெளிமாநில மக்கள், குறிப்பாக தமிழர்களுக்கு சாதகமான அறிவிப்பை விரைவில் வெளியிடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story