வீடு புகுந்து செல்போன்கள், பணம் திருடிய பெண் போலீசார் விசாரணை


வீடு புகுந்து செல்போன்கள், பணம் திருடிய பெண் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 March 2018 10:00 PM GMT (Updated: 18 March 2018 7:27 PM GMT)

விருகம்பாக்கத்தில் வீடு புகுந்து செல்போன்கள், ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்ற பெண்ணை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், சேது தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி(வயது 73). இவர், நேற்று காலை நடைபயிற்சி சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் வீட்டின் முன்புற அறையில் உள்ள மேஜையில் தனது 2 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை வைத்து விட்டு குளிக்கச் சென்று விட்டார்.

அவருடைய மனைவி, சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். கந்தசாமி குளித்து விட்டு வந்து பார்த்தபோது, மேஜையில் இருந்த 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து விருகம்பாக்கம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.

அதில் நடைபயிற்சிக்கு சென்று விட்டு கந்தசாமி வீட்டுக்கு வரும்போது அவரை பின் தொடர்ந்து பெண் ஒருவர் வருகிறார். கந்தசாமி தனது வீட்டின் உள்ளே சென்ற சிறிது நேரம் கழித்து, அந்த பெண் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து மேஜையில் இருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ.5ஆயிரத்தை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story