காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியை வெளியேற்றுவதற்கான காலம் நெருங்கி விட்டது, அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி


காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியை வெளியேற்றுவதற்கான காலம் நெருங்கி விட்டது, அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 23 March 2018 11:00 PM GMT (Updated: 23 March 2018 10:03 PM GMT)

புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசை வெளியேற்றுவதற்கான காலம் நெருங்கி விட்டது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநில நியமன எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினையில் சட்ட திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்தது தொடர்பாக புதுவை அரசே நேரடியாக நீதிமன்றம் செல்லாதது ஏன்? தனிப்பட்ட முறையில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வை வைத்து வழக்குப்போட வேண்டிய அவசியம் என்ன?

முதல்-அமைச்சர் நாராயணசாமியின் சுயநலத்தால் மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடப்பட்ட சவால். வருங்காலத்தில் மத்திய அரசு நினைத்தால் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா மற்றும் வங்கி மோசடியாளர்களை கூட நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். ஏற்கனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசின் பரிந்துரைப்படி நியமிக்க சட்ட திருத்தம் கொண்டு வந்திருக்கலாம்.

புதுவை சட்டமன்றம் கூட உள்ள நிலையில் அவசரமாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக புதுவை அரசுதான் மேல் முறையீடு செய்யவேண்டும். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு வெளியேற்றப்பட வேண்டிய அரசு. அதற்கான காலம் நெருங்கிவிட்டது. புதுவை மாநிலம் நன்மை அடைய ஆட்சி மாற்றம் தேவை.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார். 

Next Story