சிதம்பரத்தில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி மனைவியிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


சிதம்பரத்தில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி மனைவியிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 26 March 2018 9:15 PM GMT (Updated: 26 March 2018 8:11 PM GMT)

சிதம்பரத்தில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி, அவரது மனைவியிடம் 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் சின்னசெட்டி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 80). இவர் காசுகடைத்தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கமலா என்கிற காமாட்சி(75). இவர்கள் 2 பேரும் தினமும் அருகில் உள்ள பஜனை மடத்திற்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று இரவு 7 மணி அளவில் கணவன்-மனைவி இருவரும் பஜனை மடத்திற்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்தனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி சுப்பிரமணியனின் வீட்டிற்குள் சென்றார். அப்போது அவர் திடீரென கமலாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, நகையை கழற்றி தருமாறு கூறினார். அதற்கு கமலா மறுப்பு தெரிவித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன், அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். உடனே அந்த வாலிபர் தாக்கியதில் சுப்பிரமணியன் கீழே விழுந்தார்.

இதையடுத்து அந்த வாலிபர், கமலாவின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச்சென்ற வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி, அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story