காய்கறிகளை மார்க்கெட்டிற்குள் கொண்டுவர கிலோவுக்கு ரூ.1 என கட்டணம் வசூலிப்பு வியாபாரிகள் போராட்டம்


காய்கறிகளை மார்க்கெட்டிற்குள் கொண்டுவர கிலோவுக்கு ரூ.1 என கட்டணம் வசூலிப்பு வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 2 April 2018 10:45 PM GMT (Updated: 2 April 2018 9:31 PM GMT)

பெரம்பலூரில் காய்கறிகளை மார்க்கெட்டிற்குள் கொண்டு வர கிலோவுக்கு ரூ.1 என கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டி அங்குள்ள கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் பழைய பஸ்நிலைய பகுதியில் ஸ்ரீமாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. மேலும் பலர் தரைக்கடைகள் வைத்து காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். திருச்சி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், ஆத்தூர் தலைவாசல் உள்ளிட்ட வெளியிடங்களிலிருந்து மொத்தமாக மூட்டைகளில் காய்கறிகளை வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். அந்த வகையில், லாரி, சரக்கு ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் காய்கறிகளை ஏற்றி கொண்டு வந்து பெரம்பலூர் மார்க்கெட்டிற்குள் செல்ல ஒரு குறிப்பிட்ட கட்டணம் நகராட்சியின் ஒப்பந்ததாரர் மூலம் வசூலிக்கப்படுகிறது.

வசூல்

லாரி ஒன்றுக்கு ரூ.50-ம், சரக்கு ஆட்டோ-வேன் உள்ளிட்டவற்றுக்கு ரூ.25-ம் என வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கத்தை மாற்றி கொண்டு வாகனங்களில் உள்ள காய்கறிகளுக்கு கிலோ கணக்கில் கட்டணம் வாங்குவதை தற்போது நடைமுறைப்படுத்தியிருப்பதாக பெரம்பலூர் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் வாகனங்களில் 500 கிலோ காய்கறி இருந்தால் ரூ.500 செலுத்த வேண்டியிருக்கும். இந்த அதிகபட்ச கட்டணத்தால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

கடைகளை அடைத்து போராட்டம்

இந்தநிலையில் காய்கறியின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி விட்டு பழையபடியே ஒரு வாகனத்திற்கு இவ்வளவு என ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரம்பலூர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காய்கறி மார்க்கெட் நேற்று ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனை அறியாமல் சிலர் மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றதையும் காண முடிந்தது. மேலும் காய்கறி மூட்டைகள் ஆங்காங்கே அப்படியே வைக்கப்பட்டிருந்தன.

நகராட்சி ஆணையருடன் வாக்குவாதம்

இதற்கிடையே பெரம்பலூர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நலசங்க தலைவர் கண்ணன் தலைமையில், மார்க்கெட் வியாபாரிகள் திரண்டு வந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பிரகாசை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, மார்க்கெட் வியாபாரிகளான நாங்கள் தொழில்வரி, சேவைவரி, வாடகை உள்ளிட்டவற்றை நகராட்சிக்கு தவறாமல் செலுத்துகிறோம். அப்படி இருக்கையில் காய்கறிகளை மார்க்கெட்டிற்குள் கொண்டுவர கிலோவுக்கு ரூ.1 என கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்தனர். பின்னர் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் கூறியதை தொடர்ந்து வியாபாரிகள் கோரிக்கை மனு கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story