தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் ரெயில்- சாலை மறியல் போராட்டம் 1,639 பேர் கைது


தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் ரெயில்- சாலை மறியல் போராட்டம் 1,639 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2018 11:00 PM GMT (Updated: 5 April 2018 10:01 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் ரெயில்- சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 1,639 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. தி.மு.க. தலைமையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கரூரில் நேற்று தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும் தி.மு.க. மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எம்.ஜி.ஆர். கழகம், சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கையில் கட்சி கொடியுடன் கரூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை 11 மணி அளவில் திரண்டனர்.

ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முடியாதபடி தடுப்புகள் அமைத்திருந்தனர். இந்த நிலையில் தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சியினர் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தடுப்புகளை தள்ளி அகற்றிவிட்டு போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்திற்குள் புகுந்தனர். ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் நின்றும், தண்டவாளத்தில் நின்றும் போராட்டம் நடத்தினர். அந்த நேரத்தில் ரெயில் எதுவும் வரவில்லை. இதனால் ரெயில் வரும் வரை போராட்டம் நடத்துவோம் என கூறி தண்டவாளத்திலும், நடைமேடையிலும் நின்றனர்.

இந்த நிலையில் கோவை- நாகர்கோவில் பயணிகள் ரெயில் பகல் 11.45 மணி அளவில் முதலாவது நடைமேடை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலை மறிக்க கையில் கொடியுடன் ஓடிச்சென்றனர். இதனை கண்டதும் என்ஜின் டிரைவர் வண்டியை நிறுத்தினார். போராட்டக்காரர்கள் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்றும், ரெயில் முன்பும் நின்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சிறிது நேர போராட்டத்திற்கு பின் பகல் 12 மணிக்கு அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பின் ரெயில் புறப்பட்டது. ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேன், அரசு பஸ்களில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இதில் 28 பெண்கள் உள்பட மொத்தம் 200 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின் போது கும்பல் அதிகமாக இருந்த நிலையில் சிலர் கலைந்து சென்றதால் கைதானவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதேபோல கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்ககேட்டில் தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் நிலையம் அருகே ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜீ தலைமையில் நேற்று இக்கட்சியினர் திருச்சியில் இருந்து சேலம் செல்லும் ரெயிலை குளித்தலை ரெயில் நிலையத்தில் மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபோல் கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ஜன சதாப்தி ரெயிலை குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை பகுதியில் இக்கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன் தலைமையில் இக்கட்சியினர் கொடியசைத்து நிறுத்தி ரெயிலின் மீது ஏறி ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த 2 இடங்களில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 32 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

குளித்தலை தி.மு.க. உள்ளிட்ட சில கட்சி நிர்வாகிகள் குளித்தலை காந்திசிலை அருகே திருச்சி- கரூர் சாலையின் குறுக்கே நின்றுகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அய்யர்மலையில் குளித்தலை- மணப்பாறை சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த 2 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 102 பேர் குளித்தலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ரெயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட கைது செய்யப்பட்ட அனைவரும் குளித்தலை பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல் அரவக்குறிச்சியில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி நகர செயலாளர் அண்ணாதுரை, பள்ளப்பட்டி நகர செயலாளர் தோட்டம் பஷீர்அகமது, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் உள்பட 110 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். தாந்தோணி ஒன்றிய தி.மு.க. சார்பில் உப்பிடமங்கலத்தில் புலியூர்- மணப்பாறை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன், ஒன்றிய செயலாளர் ரகுநாதன், பேரூர் செயலாளர்கள் உள்பட 110 பேரை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.

கரூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளியணையில் ரெயில் மறியல் போராட்டம் மாவட்ட செய்தி தொடர்பாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அகரமுத்து, கரூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் துரையரசன், ஒன்றிய செயலாளர்கள் உள்பட 21 பேர் கலந்து கொண்டு கோவை- நாகர்கோவில் ரெயிலை வெள்ளியணை ரெயில் நிலையத்தில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தோகைமலையில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட குளித்தலை தொகுதி எம்.எல்.ஏ. ராமர், தி.மு.க பொதுகுழு உறுப்பினர் அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன் உள்பட 145 பேரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் குளித்தலை- மணப்பாறை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாலாப்பேட்டையில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் உமாபதி தலைமையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 102 பேரை லாலாப்பேட்டை போலீசார் கைது செய்து அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். க.பரமத்தி பஸ் நிறுத்தத்தில் கரூர்- கோவை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட க.பரமத்தி தி.மு.க. ஒன்றிய செயலாளர் கருணாநிதி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் வடிவேல், மாவட்ட பிரதிநிதி கருப்பசாமி உள்பட 124 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணராயபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 96 பேரையும், நொய்யல், வேலாயுதம்பாளையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 160 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 18 இடங்களில் சாலை மறியலும், 5 இடங்களில் ரெயில் மறியலும், ஒரு இடத்தில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் ஈடுபட்ட 92 பெண்கள் உள்பட மொத்தம் 1,639 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story