அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை - கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை


அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை - கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 April 2018 10:45 PM GMT (Updated: 6 April 2018 8:45 PM GMT)

பொது இடங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மலர்விழி எச்சரித்து உள்ளார்.

தர்மபுரி,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை ஒலிமாசினை தடுக்க பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. அதன்படி ஒலி மாசுவினை தடுப்பதற்கான விதிகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக தேவையான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள், காவல்துறை அலுவலர்களுக்கு வழங்கி ஒலி மாசுவினை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கூம்பு ஒலி பெருக்கி கள் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பொது இடங்கள், வழிபாடு நடத்தும் இடங்களில் உபயோகப்படுத்தக்கூடாது. இதை மீறி உபயோகப்படுத்துபவர்கள் மீது சட்ட விதிமுறைகளின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. கூம்பு ஒலிபெருக்கிகளின் பயன்பாடுகளை குறைத்தும், பிற ஒலி பெருக்கிகளில் இருந்து வெளிபடும் ஒலியின் அளவு வரையறுக்கப்பட்ட அளவிற்கு மிகாமல் இருப்பதை உறுதிபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் அதிகம் உள்ள இடங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள், உரத்த ஒலி பெருக்கிகள் பயன்பாட்டினை கட்டுப்படுத்தி தடை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒலி மாசுவினால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி தெரிவிக்க வேண்டும்.

ஒலி மாசு விதிகளை மீறுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எடுக்க வேண்டும். ஒலி மாசு ஏற்படுத்தும் உபகரணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் ஒலி பெருக் கிகளை பயன்படுத்தி பொது கூட்டம் நடத்துபவர்கள் இந்த விதிமுறைகளை பொதுமக்கள் நலன் கருதி முறையாக பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவித்து உள்ளார்.

Next Story