பெங்களூருவில் அரசு உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை


பெங்களூருவில் அரசு உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை
x
தினத்தந்தி 6 April 2018 10:20 PM GMT (Updated: 6 April 2018 10:20 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பெங்களூருவில் அரசு உயர் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் நேற்று ஆலோசனை நடத்தினார்.

நிருபர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர், “தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் தலைமையிலான குழுவினர் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 4-ந் தேதி கர்நாடகம் வந்தனர்.

அந்த குழுவினர் கர்நாடக அரசு உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் பெங்களூரு விதான சவுதாவில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் உயர் அதிகாரிகளுடன் அந்த குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“கர்நாடக சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் நாங்கள் கலந்து ஆலோசனை நடத்தினோம். அவர்களிடம் இருந்து ஆலோசனைகளை கேட்டு பெற்றுள்ளோம்.

அரசு அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவது தெரியவந்தால் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பொதுக்கூட்டம், வாகனங்கள், ஒலி பெருக்கிகளுக்கு அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. இதற்கு ஒற்றைசாளர முறையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துவது உள்பட பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க தடை விதித்துள்ளோம். அரசியல் நோக்கம் இல்லாத பிற திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

மாநில அரசு அதிக செலவில் விளம்பரங்களை வழங்கியது மற்றும் இப்போதும் விளம்பரங்களை வழங்கி வருவது குறித்து புகார்கள் வந்துள்ளன. இதுபற்றி தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சில வாரியங்களின் தலைவர்கள் அரசு வாகனங்களை இன்னும் பயன்படுத்தி வருவது குறித்தும் புகார் வந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறினால், யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்தல் பிரசார கூட்டங் களில் கலந்துகொள்பவர்களுக்கு உணவு வழங்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. அதுபற்றி பரிசீலிக்கப்படும். அரசு நியமன பதவிகளில் இருப்பவர்கள் தேர்தல் பணியில் இருந்து விலகி இருக்க வேண்டும். அரசு பணிகளில் தலையிடக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலில் பண வினியோகம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் பணம் வினியோகம் செய்வதை தடுப்பது கடினமான ஒன்று. ஆயினும் அவற்றை தடுக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 115 கம்பெனி மத்திய போலீஸ் பாதுகாப்பு படைகள் கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான பணியாளர்கள் மற்றும் போலீசார் நியமனம் செய்யப்படுவார்கள். கர்நாடகத்தில் 4.96 கோடி வாக்காளர்கள் உள்ள னர். இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

ஜனநாயகத்தை பலப்படுத்த பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர் களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையும் பயன்படுத்தப் படும்.

வேட்பாளர்களின் செலவுகள் கண்காணிக்கப்படும். அளவை மீறி செலவு செய்தால் அதுபற்றி கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செலவு கணக்குகளை கண்காணிக்கும் பணியில் வருமான வரித்துறையை சேர்ந்த 1,344 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் 1,245 கணக்கு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணம் தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அதுபற்றி 1800-4252-115 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம்.

கர்நாடகத்தில் 5 விமான நிலையங்களில் ரகசிய குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்புகள் நடக்கின்றன. வணிக வரித்துறையை சேர்ந்த 200 நடமாடும் குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. கர்நாடகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 130 கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.23.76 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.19.37 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.”

இவ்வாறு ஓம்பிரகாஷ் ராவத் கூறினார்.

Next Story