கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்


கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்
x
தினத்தந்தி 15 April 2018 11:00 PM GMT (Updated: 15 April 2018 7:27 PM GMT)

புதுக்கோட்டை அருகே கோவில்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டியில் மலையக்கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஊர் காவல் தெய்வமாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டியில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடத்த ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து கோவில்பட்டி மலையக்கருப்பர் கோவில் அருகே வாடிவாசல் அமைக்கும் பணி, தடுப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை விழாக்குழுவினர் செய்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் ஜல்லிக்கட்டு திடலை பார்வையிட்டு அனுமதி வழங்கினர். தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்காக கொண்டு வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் இறங்க அனுமதித்தனர்.

அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டை நேற்று காலை 8 மணிக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ் மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்க முன்வரவில்லை. அதனை தொடர்ந்து புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 1167 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் துள்ளிக்குதித்து ஓடின. இதனை பார்வையாளர்கள், பொதுமக்கள் கண்டுகளித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர் களுக்கும், 2 ஸ்கூட்டர்கள், தங்கம், வெள்ளி நாணயம், ஆட்டுக்குட்டிகள், பீரோ, கட்டில், நாற்காலி, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், கிரைண்டர், மின்விசிறி உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, குமார் எம்.பி, மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, புதுக்கோட்டை அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர், புதுக்கோட்டை, கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். 

Next Story