வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து வெள்ளைக்கரடு மலையில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்


வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து வெள்ளைக்கரடு மலையில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2018 11:00 PM GMT (Updated: 19 April 2018 11:05 PM GMT)

வெள்ளைக்கரடு மலையில் குடியேறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து, வெள்ளைக்கரடு மலையில் குடியேறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உணவு சமைத்து சாப்பிட்டனர்.

உத்தமபாளையம் அடுத்துள்ளது சின்னஓவுலாபுரம். இங்கு ஆதிதிராவிடர் காலனிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள கோவில் மற்றும் மயான பகுதிக்கு செல்ல முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் மற்றும் தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு இடம் குறித்து முறையான அளவீடுகள் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று உத்தமபாளையம் தாசில்தார் பாலசண்முகம், துணை தாசில்தார்கள் நசீர், சுருளி மற்றும் வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் நிலம் குறித்த அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் குறிப்பிட்ட இடம் தனியார் பட்டா இடமாக உள்ளது என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதற்கு அந்தபகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து எங்களுக்கு சொந்தமான இடத்தை சிலர் போலியான ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றுள்ளனர். பட்டாவை ரத்து செய்யவேண்டும் என்று கூறினர்.

ஆனால் தனியார் இடம் என்று அதிகாரிகள் திரும்பி சென்றதாக தெரிகிறது. வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள வெள்ளைக்கரடு மலைப்பகுதியில் குடியேறி அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் உணவு தயாரித்து அனைவரும் சாப்பிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சென்னியப்பன், தாசில்தார் பாலசண்முகம், ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலீசார் வெள்ளைக்கரடு மலைப்பகுதிக்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story