இன்று திருமணம் நடைபெற இருந்தநிலையில் மணமகன் தூக்குப்போட்டு தற்கொலை


இன்று திருமணம் நடைபெற இருந்தநிலையில் மணமகன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 April 2018 10:15 PM GMT (Updated: 21 April 2018 7:34 PM GMT)

இன்று திருமணம் நடைபெற இருந்தநிலையில் மணமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாம்பரம்,

தஞ்சாவூரை சேர்ந்தவர் மாதேஷ்வரன் (வயது32). இவர் சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பம்மல், சத்தியா நகரில் தங்கியிருந்தார். நாகல்கேணியில் லெதர் கட்டிங் நிறுவனம் நடத்திவந்தார். அவர் கெருகம்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

காதலர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அந்த பெண்ணுக்கும், மாதேஷ்வரனுக்கும் மாங்காடு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக மாதேஷ்வரனின் சகோதரர் நேற்று காலை பம்மலுக்கு வந்தார். நீண்ட நேரமாக அவர் மாதேஷ்வரன் வீட்டு கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டில் இருந்த ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது மாதேஷ்வரன் வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுபற்றி அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்துவந்த போலீசார் மாதேஷ்வரன் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இன்று திருமணம் நடைபெற இருந்தநிலையில், மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதேஷ்வரன் தற்கொலைக் கான காரணம் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story